பக்குவநிலைக்கான வழி ( Pakkuvanilaikkana vali )
Description
பக்குவநிலைக்கான வழி என்னும் இந்நூல் சிந்தனையுடைய நவீன கால வாசகர்களுக்கான பெரும் வரப்பிரசாதமாகும். மனித சமுதாயம் தனது ஆன்மீக வளர்ச்சிக்காக பன்னெடுங்காலமாகப் பின்பற்றி வரும் யோக வழிமுறைகளையும் அதுகுறித்த நுணுக்கமான தத்துவங்களையும் இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. பகவத் கீதையின் அந்த யோக தத்துவத்தினை தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் (1896 –1977) அழகாக எடுத்துரைத்துள்ளார். பகவத் கீதையின் தொடக்கத்தில், அர்ஜுனன், தன்னுடைய அடையாளத்தையும் குறிக்கோளையும் நினைத்து குழம்பியதால், கிருஷ்ணரிடம் சரணடைந்தான். கிருஷ்ணர் தமது திறன்மிக்க சீடனுக்கு பக்குவநிலைக்கான வழியை உபதேசித்தார். தனிப்பட்ட உணர்விற்கும் உன்னத உணர்விற்கும் இடையிலான இணைப்பே பக்தி யோகம் எனப்படுகிறது. இந்த பக்தி யோகப் பயிற்சியினை வாழ்வின் மையமாக நிலைநிறுத்த வேண்டும் என்பதே கீதையில் பகவான் கிருஷ்ணர் வழங்கும் உபதேசத்தின் சாரமாகும். பக்குவநிலைக்கான வழி என்னும் இந்நூலில், யோகத்தின் எல்லா வடிவங்களையும் உள்ளடக்கிய பக்தி யோகம் மிகவும் எளிமையானது, உலகெங்கிலும் பின்பற்றத்தக்கது என்பனவற்றை ஸ்ரீல பிரபுபாதர் தமது தொடர் சொற்பொழிவின் மூலமாக தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துரைக்கின்றார். மிகவும் சிக்கலான நவீன நாகரிகத்தில் பிணைக்கப்பட்டுள்ள நபர்களும்கூட எவ்வாறு சிக்கலற்ற முறையில் மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டு பரம ஆனந்தத்தை அனுபவிக்க முடியும் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் காண்பிக்கின்றார்.